
கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம்(மோதரை) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று பிரதேசங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனித அன்றூஸ் வீதி, புனித அன்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியும் முடக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி வாழ் மக்கள் அறிவிக்கப்படாத இந்த வீதியை முடக்கியது ஏன் என விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட புனித அன்றூஸ் கீழ் வீதி மூடப்படாது வாகனப் போக்குவரத்து காலை முதல் இடம்பெற்று வருவதையும் அவதானிக்க முடிந்தது.
Be the first to comment